Friday, January 11, 2008

சிவாஜி - தி லாஸ்...!


சிவாஜி படத்தால் தங்களுக்கு ரூ. 3 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக 3 விநியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதை ஏவி.எம். நிறுவனம் ஈடு கட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
உலகெங்கும் 1000க்கும் மேற்பட்ட பிரிண்டுகளுடன் திரையிடப்பட்ட படம் சிவாஜி. தமிழகத்தில் மட்டும் 450 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது.
சிவாஜி படத்தை தமிழகத்தில் திரையிட 8 விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கினர். விநியோக உத்தரவாத அடிப்படையில் இப்படத்தை அவர்கள் வாங்கினர்.சிவாஜியால் பெரும்பாலான விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. ஆனால் திருச்சி, செங்கல்பட்டு - பாண்டிச்சேரி, கிருஷ்ணகிரி பகுதி விநியோகஸ்தர்கள் மட்டும் ரூ. 3 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புகார் கூறியுள்ளனர்.இதுகுறித்து கிருஷ்ணகிரி - நாமக்கல் விநியோகஸ்தர் சி.பிரகாஷ் (விகாஷ் பிக்சர்ஸ்) கூறுகையில், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் 33 தியேட்டர்களில் சிவாஜி படத்தைத் திரையிட ரூ. 5.5 கோடி பணம் கொடுத்தோம். ஆனால் இதுவரை ரூ. 4.30 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது.
எனது பகுதியில், சிவாஜி பெரும் வசூலை எட்டியுள்ளது. இது சாதனைதான். இருந்தாலும் ரூ. 1.20 கோடி அளவுக்கு எனக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஏவி.எம். நிறுவனம் சரிக்கட்டும் என நம்பினேன். ஆனால் எங்களது குமுறலைக் கேட்கக் கூட அவர்கள் தயாராக இல்லை. இதனால் நான் பெரும் ஏமாற்றமடைந்துள்ளேன்.
ஏதோ தீண்டத்தகாதவர்களைப் போல எங்களைப் பார்க்கிறது ஏவி.எம். நிறுவனம். இந்த செயலுக்காக எதிர்காலத்தில் அவர்களுக்கு சரியான பாடம் கற்பிப்போம். இப்போது ரஜினியைத்தான் நான் நம்பியுள்ளேன். அவர்தான் எங்களது பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பிரகாஷ்.
செங்கல்பட்டு - பாண்டிச்சேரி பகுதிக்கான விநியோகஸ்தரும், இன்சைட் மீடியா பிலிம் நிறுவனத்தின் உரிமையாளருமான நாக் ரவி கூறுகையில், எனக்கு சிவாஜியால் ரூ. 1 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.பட விநியோக உரிமைக்ாக ரூ. 4.65 கோடி கொடுத்தேன். ஆனால் ரூ. 3.30 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. நஷ்டப்பணத்தை ஏவி.எம். நிறுவனம் திரும்பித் தரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எனது நம்பிக்கைக்கு பாத்திரமாக அவர்கள் நடந்து கொள்ளவில்லை.நிலைமை சரி செய்ய ரஜினி நடவடிக்கை எடுப்பார் என இப்போது நம்புகிறேன் என்றார்.
திருச்சி - தஞ்சை பகுதிக்கான விநியோகஸ்தான ரமேஷ்குமார் கூறுகையில், சிவாஜி பட விநியோகத்தால் எனக்கு ரூ. 1 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரஜினி படத்தை குறைந்த விலைக்குத்தான் விற்குமாறு கூறியிருந்தார். ஆனால் ஏவி.எம். நிறுவனம்தான் அதிக விலைக்கு வைத்து விற்றது.
எனவே இது ஏவி.எம். நிறுவனத்தின் தவறுதான்.நஷ்டப்படும் விநியோகஸ்தர்கள் குறித்து ஏவி.எம். நிறுவனம் அக்றை காட்டவில்லை. அது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. ரஜினி சார் குறித்து எனக்கு நன்கு தெரியும். விநியோகஸ்தர்களை மதிப்பவர் அவர். அவரது பதிலுக்காக நாங்கள் பொறுமையோடு உள்ளோம் என்றார்.
இப்படி முக்கியமான மூன்று விநியோகஸ்தர்கள் நஷ்டக் கணக்கு காட்டி வரும் நிலையில், சென்னை நகர உரிமையைப் பெற்ற அபிராமி ராமநாதனும், ஜிவி பிலிம்ஸ் நிறுவனமும் ரூ. 7 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளன.நஷ்டமடைந்துள்ள 3 விநியோகஸ்தர்ளும் ரஜினியை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். சிவாஜி படத்தின் வெள்ளி விழா 11ம் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக ரஜினியைப் பார்த்து பிரச்சினைக்கு முடிவு கட்ட அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
பெரும் வசூலை வாரியதாக சிவாஜி படம் குறித்து செய்திகள் வெளி வந்த நிலையில் கோடிக்கணக்கில் நஷ்டம் என மூன்று முக்கிய விநியோகஸ்தர்கள் குரல் எழுப்பியுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாபா படத்தால் ஏற்பட்ட பெரும் இழப்பை ரஜினி ஈடுகட்ட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களை அமைதிப்படுத்தினார். அதேபோல சிவாஜி பட விநியோகஸ்தர்களுக்கும் நிவாரணம் கிடைக்குமா, ஏவி.எம். இறங்கி வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி - thatstamil.oneindia.in

Thursday, January 10, 2008

ஒரம்போ..ஒரம்போ...லட்ச ரூபா வண்டி வருது..!


டாடா நிறுவனத்தின் 1 லட்ச ரூபாய் கார் அதோ இதோ என்று ஒரு வழியாக வெளியாகி விட்டது. உலகின் மலிவான காரை தயாரித்து இந்திய நாட்டினை உலக அரங்கில் பெருமை படுத்தி இருக்கிறார் ரத்தன் டாடா. இந்த கனவை சாத்தியம் ஆக்க இரவு பகல் பாராமல் உழைத்த பொறியாளர்கள் குழுவுக்கும் சபாஷ்.

மாருதி போன்ற போட்டி குழுமங்களின் வயிற்றெரிச்சலை தாண்டி சாதித்திருக்கும் டாடாவின் இந்த காரில் சில நல்ல அம்சங்கள் உண்டு.

முக்கியமாக, ஒரு பைக் அல்லது ஸ்கூட்டர் ஏற்படுத்தும் சுற்றுப்புற சீர் கேட்டினை விட மிக குறைவான புகை ... யூரோ 4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு தயாரித்து இருப்பது பெரிய ஆறுதல்.
ஏறக்குறைய எல்லா தளங்களும் இந்த காரின் தொழில் நுட்ப சமாசாரங்களை அலசி காய போட்டு இருப்பார்கள் (624 ஸீஸீ இஞ்சின் , 1 லிட்டர் பெட்ரோலுக்கு 20 கிலோ மீட்டர் வரை செல்லும் போன்றவை...)
ஆனால் இந்த கார் ஏற்படுத்த கூடிய எதிர் வினைகளை யோசிக்கிறேன்...

1. இரு சக்கர வாகனங்களின் விற்பனை சரிவு -விலை குறைப்பு நடவடிக்கை

2. இந்த மாத இறுதி க்குள் 9500 ரூபாய் வரை விலையை உயர்த்த எண்ணி இருந்த மாருதி குழுமத்தின் நினைப்பில் மண்.

3. 2 சக்கர வாகன நிறுவனங்கள் (உதாரணம் - பஜாஜ் ) வெளியிட்ட
பங்குகளின் விலை சரியும். அவற்றை வாங்கியவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம்.

4.சிறிய கார்கள் மீது மோகம் பெருகும். புதிதாய் கல்யாணம் செய்தோரின் குடும்பத்தின் அளவை காண்டம்கள் மட்டுமல்ல இனி கார்கள் கூட தீர்மானிக்கலாம்.

5. ஏற்கனவே 17ம் தேதிக்கு பின் பெட்ரோல் விலை உயர இருக்கும் சூழலில் இந்த காரின் உற்பத்தி பெருகும் பட்சத்தில் பெட்ரோல் தேவை அதிகரிக்கும். பற்றாக்குறை தவிர்க்க முடியாமல் அதிக டாலர் விலைக்கு உபரி கச்சா எண்ணை வாங்கப் படலாம்.

(தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க ..எண்ணை விலை ஏறி போச்சு மாட்ட பூட்டுங்க .. என்று அப்போ நாம் பாடலாம்...)

6. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கார் தயாரிக்க கால் வைக்கும்.
காங்கிரஸ் வழக்கம் போல் பச்சை கொடி காட்டும். மார்க்ஸிஸ்ட் முதலில் வீறு கொண்டு எதிர்த்து பின்னால் கூட்டணி தர்மப்படி அமைதி காக்கும்.

7.டாடா நிறுவனம் தனது 1 லட்ச ரூபாய் கார் தொழிற்சாலையை சிங்கூரில் அமைக்க உள்ளது. சிங்கூரில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க விளை நிலங்களை தனியாருக்கு தாரை வார்ப் பதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் அரங்கேறிய வன்முறை - போலீஸ் தடியடி எல்லாம் நினைவில் வருகிறது. ஏற்கனவே நந்தி கிராமால் நாறிப் போயிருக்கும் புத்ததேவின் அரசு திரிணாமூல் கட்சியால் மேலும் சிக்கலை சந்திக்கும்.

இந்த பரிட்சைகளை தாண்டி தேறினால் மட்டுமே, டாடா தனது வெற்றியை முழுமையாக கொண்டாட முடியும்.

அதுவரையில் இவ்வெற்றி தற்காலிகமானதே..!

Tuesday, January 1, 2008

புத்தாண்டு ... அட இன்னும் ஒரு நாளே (ஜி. நாகராஜனுக்கு நன்றி)

எவருக்கும் எஸ்.எம்.எஸ் (குறுஞ் செய்தி சரியா என்று தெரிய வில்லை) அனுப்ப முடியாத, கிட்ட தட்ட எல்லா மொபைல் சேவைகளும் தொடர்பு கொள்ள இயலாத நல்லதொரு புத்தாண்டு விடிந்தது.. வழக்கம் போல் தொல்லை காட்சிகள் மன்னிக்கவும் தொலைக்காட்சிகள் சினிமாவும் சினிமா சார்ந்த அபத்தங்களையும் ஒளி பரப்பின. எனக்கு இந்த படத்திலே ஒரு பப்லி கேரக்டர் என்று கதாநாயகிகள் மறக்காமல் குறிப்பிட்ட பேட்டிகளும்,

டோல் டோல் தான் அடிக்கிறான் போன்ற நாட்டுக்கு அவசியமான பாடல்கள் முதல் 5 இடங்களுக்குள் வழக்கம் போல் வந்த கவுண்ட் டவுன்களும், போடு போடு என்று கதாநாயகியே விரும்பி அழைத்து கற்பிழந்த பருத்தி வீரன் களும், 700 ரூபாய் கொடுத்து ரசிகர்களை டிக்கட் வாங்க வைத்து கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று வீரமாய் பேசிய சிவாஜிகளும் முதல் 5 இடங்களை பிடித்த சிறந்த பத்து படங்களின் பட்டியலும் வெறுப்பேற்றின

தமிழ் தாயை எல்லாரும் ஒரு நாள் முழுக்க மூச்சு திணற திணற ஆண்டே நூற்றாண்டே என்று நிறைய பேர் கவி பாடி இருப்பார்கள். தமிழ் அன்னைக்கு ஓய்வு கொடுக்கும் பொருட்டு கவிதை எழுதுவதை கண்டிப்பாய் தவிர்த்து விட்டேன்.

உறுதி மொழியா அப்படின்னா? (அடியேன் பின் பற்றுவதே இல்லை.....!)

அப்புறம் ... எல்லாருக்கும் (ஆங்கில) புத்தாண்டு வாழ்த்துக்கள்...