Wednesday, November 14, 2007

கலைஞானிக்கு பிறந்த நாள் வாழ்த்து கவிதை.

கலைஞானி கமல்ஹாசனின் பிறந்த நாள் அன்று என் நண்பர்கள் நிர்வகிக்கும் அவரது ஆர்க்குட் குழுமத்தில் அடியேன் எழுதிய பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை

உலக நாயகனே,

நீ

மனசுக்கு ஒப்பனை போடாத

மாபெரும் கலைஞன்


நவம்பர் 7 அன்று உன்

இளமை ஊஞ்சலாடுவதைக் கண்டு

தனக்கு வயதாகி விட்டதென்று

மீண்டும் ஒரு முறை

ரகசியமாய் வெட்கப்பட்டது காலம்..!


சிகப்பு ரோஜாக்களோடு உனக்காக

காத்திருக்கும் தமிழ்நாட்டு கன்னியர்க்கு

இன்று தான் காதலர் தினமாம்


பாவம் உன் முத்தங்களையாவது

அவர்களுக்கு காற்றில் அனுப்பி வை...


உன்னிடம் முத்தம்

வாங்காத நாயகியர் எல்லாம்

மோட்சம் பெறாத அகலிகைகள்


என் கணக்கில்

இன்னும் வயதுக்கு வராதவர்கள்...

தமிழ் சினிமாவின் பேரகராதி நீ

உன் சாதனை பக்கங்களை எல்லாம்

விரலை வைத்து வித்தை காட்டும்

பொடியர்கள் ரகசியமாய் பிட் அடிக்கிறார்கள்


என்னால் இயன்ற தமிழில்

உன் சாதனை பக்கங்களை பற்றி

சொல்லத் தான் நினைக்கிறேன்..


உனது அரங்கேற்றம் தூங்கிக்

கிடந்த தமிழ் சினிமாவைத் தட்டி எழுப்பியது...!


விழித்து கொண்ட வெள்ளித் திரை

நீ என்னை ஆள வந்தான் என்று

வெண்சாமரம் நீட்டி வரவேற்றது.


தீயதிலும் நல்லதை ஏற்பவன் நீ

அதனால் தானோ உன் திரை வாழ்விலும்

சொந்த வாழ்விலும் காதல்கள்

தோற்ற போதெல்லாம்

மூன்றாம் பிறை,வாழ்வே மாயம் என

வெற்றிகள் பிரம்மாண்டமாய்

உன்னிடம் கை குலுக்கி கொண்டன.


அக்ஷாரா ஸ்ருதி.....

உன் மன்மத லீலையில்

விளைந்த காதல் பரிசு.


கடலை குடையக் கலைஞர்

சொன்னது நோ ராம்

காந்தியாரை புரிந்திட நீ

எமக்கு தந்ததோ ஹே ராம்


நீ அல்பசினோ, சிவாஜி

எனும் மலைகளைக்

காதலிக்கும் மகாநதி..


உன்னை பற்றி எழுதும் போது

எனக்கு நானே மகுடம்

சூட்டிக் கொள்கிறேன்...

நீ எனக்குள் ஒருவன் அல்லவா.


இயக்குநர் சிகரத்தின் இரு கரம்

உன் வாழ்வுக்கு விதை போட்டது

அன்னை இல்லத்தின் ஆல மரமோ

உன் நடிப்புக்கு உரம் போட்டது.


ஆசிரியன் அனந்துவின்

ஆழ்ந்த ஞானமோ உன்

ஆர்வத்துக்கு தீனி போட்டது.



நல்ல சினிமா தருவதற்கு

நீ இஷ்டப்பட்டே கஷ்டப் படுகிறாய்

சில முறை அதனால் நஷ்டப் படுகிறாய்


உலக சினிமாவின் நுட்பங்களை

உள்ளங்கையில் சிறைப் பிடித்த

நவீன அலெக்சாண்டர் நீ


தோல்வி சோதனைகளைச் வெற்றிச்

சாதனையாய் உருமாற்றும்

திரை விஞ்ஞானி நீ


உனக்கு சாத்தியம் என்பது

சொல்லை விடவும் செயல் அன்றோ?


தமிழ் திரையின் தாமஸ் ஆல்வா எடிசனே
எப்படியும் ஒரு நாள் நீ ஏற்றி வைப்பாய்

ஆஸ்கர் எனும் அற்புத விளக்கை.